இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Monday 9 June 2014

காசி யாத்திரை

-              கமலத்திற்கு ரொம்ப நாளாகவே ஓர் ஆசை.எப்படியும் ஒரு தடவையாவது காசியாத்திரை போய் 'அனுமான் காட்'டில் கங்கா ஸ்நானம் செய்து பாவங்களை எல்லாம் கங்கையில் கரைத்துவிட்டு, ''அப்பா விஸ்வநாதா!இனி ஜென்மம் முடியும் மட்டும் நான் தெரிந்தோ தெரியாமலோ எந்த ஒரு பாவமும் செய்யாமல் இருக்க நீ அருள் புரியவேண்டும் அப்பனே!''--என்று நெஞ்சுருக பிரார்த்தித்து வரவேண்டும்.

           இதுதான் கமலத்தின் நெடுநாள் ஆசை.

           கண்ணனுக்கும் கமலத்திற்கும் கல்யாணமாகி முப்பத்தாறு ஆண்டுகள் கடந்து விட்டன. அன்னியோன்ய தம்பதிகள்.பொருட்செல்வத்திற்கும் குறைவில்லை. ஆனால் அவர்களுக்கு மழலைச் செல்வம்தான் கிடைக்கவில்லை. மனத்தின் அடியில் அது ஒரு பெருங்குறையாக இருந்தாலும் இதனை ஒருவருக்கொருவர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாகவே வாழ்க்கை நடத்தினர்.

           இந்நிலையில் தான் ஆறு ஆண்டுகளுக்கு முன் கண்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஒரு நவீன மருத்துவமனையில் சேர்த்து நலம் பெற்றார். இருந்தாலும் போதாக்குறைக்கு ஆஸ்த்மா வேறு ஆட்கொள்ள தினமும் தவறாமல் உணவு உட்கொள்வது போல் இரண்டு வேளையும் உள்ளங்கை
நிறைய வண்ணவண்ண மாத்திரைகளை உண்டு காலம் கடத்தி வருகிறார்.

       கமலம் அடிக்கடி கூறுவாள்,''ஏங்க! ஒரு தபா காசிக்கு போயிட்டு வருவோமே!''

       மனைவியின் எந்த ஒர் ஆசையையும் தட்டாமல் நிறைவேற்றும் கண்ணனுக்கு ஏனோ காசி யாத்திரையில் மட்டும் ஆர்வம் இன்றி இருந்தது. என்றாலும் இப்போதெல்லாம் கமலம் அடிக்கடி தன் காசியாத்திரை அபிலாசையை வெளியிடத்தொடங்கியதால், “ஒரு நடை காசிக்குப் போய் வரலாம்!” --என்றே முடிவு செய்து விட்டான் கண்ணன் என்றாலும், 'தன் முடிவை மனைவியிடம் தெரிவிக்கும்  முன் தம் மருத்துவரிடமும் கேட்டு தக்க ஆலோசனை பெறுவதே உசிதம்'--என்று கருதினான் கண்ணன்.

          அடுத்த மருத்துவ ஆய்வுக்குச் சென்ற போது அவரிடம் தங்கள் காசிப்பயணம் குறித்துச்  சொல்லி, “போய் வரலாமா?” - என ஆலோசனை கேட்டார். மருத்துவரும் உடனடியாக பதில் கூறாமல்
 சிறிது யோசித்த பின்,''எதற்கும் ஒரு எக்கோ டெஸ்டும்,டி.எம்.டி. டெஸ்டும் எடுத்துப் பார்த்து விடுவோம்.''-என்று கூறி அதற்கான குறிப்புச் சீட்டு எழுதித்தந்தார்.கண்ணனுக்கு அந்த மருத்துவமனை-
யிலேயே எல்லா டெஸ்டும் எடுக்கப்பட்டது.

          இரு மருத்துவ சோதனைகளின் முடிவைப்பார்த்த மருத்துவர் கூறினார், “மிஸ்டர் கண்ணன், நான் சந்தேகப்பட்டது போலவே உங்கள் இருதயம் மிகவும் பலஹீனமான நிலையில்  இருக்கிறது.இது போன்ற தூரப்பயணங்களை எல்லாம் இப்போது மேற்கொள்ளாமல் முழு ஓய்வில்
இருப்பதுதான் உங்கள் உடல் நலத்திற்கு உகந்தது.!” - என்று உறுதியாகக் கூறிவிட்டார். கண்ணனுக்கு யோசனையோ யோசனை.மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்யலாம் என்று நினைக்கும் போது மருத்துவர் இப்படி என் உடல் சீர் கேட்டைக் காரணம் காட்டித் தடுக்கிறாரே!''-என்று ரொம்பவும்
கவலையாகி விட்டது. என்றாலும் எப்படியும் தன் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் உறுதியோ உறுதியாக இருந்தார்.

          எனவே கண்ணன் மருத்துவரின் பரிந்துரையை மனைவியிடம் கூறாமல் மறைத்து விட்டார்.

            *****     ********       ************       *********        *****************

         வீட்டிற்குள் நுழைந்த கணவரிடம் கேட்டாள் கமலம், “என்னங்க, டாக்டர் என்ன சொன்னார்?

 நீங்க காசிக்குப் போகலாம்னாரா?” -என்ற அவளது கேள்வியில் உடனே பயணப்பட்டு விடவேண்டும் என்ற ஆதங்கம் மிகுதியாக இருப்பதைக் கவனித்தான் கண்ணன்.

        ''ஆமாம், போகலாமாம்! டெஸ்டெல்லாம் எடுத்துப் பார்த்து 'ஓகே' சொல்லிட்டார்!''-- என்று கணவன் கூறியதும் கமலத்தின் முகம் பூரிப்பால் பூரியாய்ப் பொங்கியது.

             ************    ******************                *************************

           மறுநாள் காலையிலேயே கண்ணனும் கமலமும் ஒரு பிரபல டிராவல் ஏஜன்ஸியிடம் சென்று விருப்பத்தை வெளியிட்டனர். அவர்களும் காசி யாத்திரை சம்பந்தப்பட்ட பல பேக்கேஜ்களை
காட்டி,'' இதில் உங்களுக்கு உகந்ததைத் தேர்ந்தெடுங்கள்!''-என்றதும் 'அலகாபாத்,ஹரித்துவார்,காசி, கயா'-என்றிருந்த பன்னிரண்டு நாள் பயணத்தைத் தேர்ந்தெடுத்து முன்பணமும் செலுத்தி விட்டு
வந்தனர்.

           கமலத்திற்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. கையில் ஆரஞ்சு மிட்டாய் கிடைத்ததும் பூரித்து போகும் சின்னக் குழந்தை போல் கமலம் அப்படி மகிழ்ந்து கண்ணன் இதுவரை பார்த்ததில்லை.

           அன்பு மனைவிக்கு இப்படி ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தந்ததில் கண்ணனுக்கு பரிபூரண திருப்தி.

                ************               *********************         **********************

          காசிப்பயணத்திற்கான நாள் நெருங்கி விட்டது. காசிப்பயணம் சென்று முன் அனுபவம் உள்ளவர்களிடம் எல்லாம் கேட்டுக்கேட்டுத் தேவையான பொருட்களை எல்லாம் சேகரித்துக் கொண்டார்கள்.

          ''ஏங்க!'' --என்றாள் கமலம்.

          ''அதுதான் முப்பத்தாறு வருஷமா உன்னைப் பார்த்துப்பார்த்து ஏங்கிட்டு இருக்கேனே, இன்னும் என்ன சொல்லு!''

          --- எழுபத்து நான்கு வயது கண்ணன் இப்போது பதினாறு வயது வாலிபன் போல் மாறி விட்டான். மனைவியைத் திருப்தி படுத்துவதிலும் மகிழ்விப்பதிலும் அப்படி ஒரு ஆனந்தம் அவனுக்கு.

          ''அதில்லேங்க! காசிக்குப்போனா ரொம்பப் பிடிச்ச எதையாவது ஒண்ணை விட்டுட்டு வரணும்பாளே! நாம எதை விடறது?''- என்று கேட்டாள் கமலம்.

         ''ரொம்பப் பிடிச்சதை விடணும்னா… எனக்கு இந்த உலகத்திலேயே ரொம்பப் பிடிச்சது நீதான். அதுக்காக உன்னை அங்கேயே விட்டுட்டு வரமுடியுமா? அடிப்போடி பைத்தியக்காரி!..... எதையாவது கத்திரிக்காயோ....முருங்கக்காயோ.....இனி சாப்பிடறதில்லைன்னு ஒரு சபதம் பண்ணின்டு வந்தாப்போச்சு! இதெல்லாம் ஒரு சம்பிரதாயம்தானே!''--என்று கண்ணன்  சொன்னதும் கமலத்துக்கு நெஞ்சு விதுக்கென்றது. என்றாலும் இவர் எப்பவும் இப்படித்தான் ஜோக் அடிச்சிண்டே இருப்பார். 'நெருப்புன்னு சொன்னா வாய் வெந்தா போயிடும்!'னு தன்னைத்தானே சமாதானப்படுத்திண்டு,
 ''ஆமாங்க!எனக்குச் சீனிஅவரைக்காய்ன்னா ரொம்பப் பிடிக்கும்! நான் அதை விட்டுடறேன்! உங்களுக்கு டிவி பார்க்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும் இல்லே...நீங்க அதை விட்டுடுங்க''--என்று கமலம் கூறியதும் கண்ணன்,''ஆசைஆசை!இவள் சீனிஅவரைக்காயை விடுவாளாம்---நான் டிவி
பார்க்கிறதை விடணுமாமே! நல்லா இருக்கே கதை! நானும் சீனிஅவரைக்காயை விட்டுடறேன்! காசிக்குப் போயிட்டு வந்த பிறகு நம்ம வீட்டிலே சீனிஅவரைக்காய் சமையலே கிடையாது!'' என்று கண்ணன் கூறியதும் கமலம் சந்தோஷம் தாங்க முடியாமல் கலகல வெனச்சிரித்தாள்.

            ***************             ********************         *****************

           காசி மண்ணில் கால் வைத்ததுமே கமலத்தின் உடல் சிலிர்த்தது. உணர்ச்சிப் பெருக்கில் அவளது கண்கள் குளமாயின. அதைப் பார்த்ததும் கண்ணன் கேட்டான்,''ஏம்மா, அழறியா?''

          ''இல்லேங்க!...ஆனந்தம்....சந்தோஷம் தாங்க முடியலே!--அதற்கு மேல் பேச்சு வராமல் திணறினாள்.

           அவர்கள் காசிக்குப் போய்ச் சேரும் போது மாலை நேரம். டிராவல் ஏஜன்ஸியினர் அனைவரும் தங்குவதற்கு அவரவர் வசதிக்கு ஏற்பவும் வேண்டுகோளுக்கு ஏற்பவும் உரிய வசதிகளை செய்து தந்திருந்தனர். பலர் பொது ஹாலில் தங்கினர்; சிலர் தனி அறைகளில் தங்கினர்.

           கண்ணனும் 'தங்களுக்கு தனி டபிள் பெட்ரூம் வேண்டும்' எனக்கூறி ஏற்பாடு செய்து கொண்டான்.

           அறை நல்லவசதியாகவும் அழகாகவும் இருந்தது.

          ''ஏங்க நாம எப்போ கங்கையிலே போய் குளிக்கப் போறோம்?''--என்று கமலம் சிறுபிள்ளை போல் கேட்டதும் கண்ணனுக்குச் சிரிப்பு வந்தது.

          ''பைத்தியம்! இப்போ மணி ஏழு...ராத்திரி ஏழு மணி! இப்போ சித்த நேரத்திலே டிபன் வந்து சேரும். சாப்பிட்டு நிம்மதியா தூங்கு! காலையிலே எழுந்திரிச்சதும் டிராவல்ஸ்காரங்களே கங்கைக்கு கூட்டிண்டு போவாங்க. அங்கே நன்னா கங்காஸ்நானம் பண்ணின்டு, காசி விஸ்வநாதர் கோவில்...பைரவர் கோவிலுக்கெல்லாம் அவாளே கூட்டிண்டு போவா!''--என்று கண்ணன் கூறியதும் கமலம்,''க்கும்ம்!''--என்றுசிணுங்கியபடிய,''எப்போ விடியும்?''--என்றாள்.

            கண்ணன் சிரித்தான்!

             **************         ******************              *************************

           காலையில் எல்லோரும் அனுமான்காட்டிற்குப் புறப்பட்டனர். அங்கே கண்ணனும்  கமலமும் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி கங்கையில் ஆசைதீர முக்கி முக்கிக் குளித்து மூழ்கி எழுந்து ஆசை தீரக்குளித்து ஆனந்தத்தில் மூழ்கி எழுந்து அகமிக மகிழ்ந்தனர்.விஸ்வநாதர் கோவிலிலும் பைரவர் கோவிலிலும் தரிசனத்தை முடித்துக் கொண்டு விடுதிக்குத் திரும்பினர். மாலையில் எல்லோரும் ஷாப்பிங் செல்வதாகத் திட்டம்.

        கமலம் திடீர் என்று ஞாபகம் வந்தவளாய்,'' ஏங்க, கங்கையில் குளிக்கும் போது சீனிஅவரைக்காயை  விட்டேன்னு சங்கல்பம் செய்து கொண்டேளா?''--என்று கேட்டாள்.

        ''இல்லேடி!இங்கே நாம இன்னும் ரெண்டு நாள் இருக்கப்போறோம். பக்கத்திலே இருக்கிற சாரநாத்,எதிர்கரையிலே இருக்கிற காசிராஜாவோட அரண்மனைன்னு பார்க்க வேண்டிய இடம் நிறைய இருக்கு. நாம புறப்படறதுக்கு முன்னாலே கடைசியா கங்காஸ்நானம் பண்ணுவோமே---
அப்போ மணிகர்ணிகா காட் அதாவது சக்கர தீர்த்தத்திலே சங்கல்பம் பண்ணின்டா போதும்''--என்று கூறினான்.

            ***************           ***************************        ************************

       மறுநாள் காலை எழுந்த கமலம் பாத்ரூமிற்குள் போனவள்,''ஏங்க!''--என்று வீறிட்டு அலறும் சப்தம் கேட்டதும்--படுக்கையில் புரண்டு கொண்டிருந்த கண்ணன் வேகமாக எழுந்து ஓடினான்.

               அங்கே----

      கமலம் மயங்கிக் கிடந்தாள்.கண்ணனுக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை! உடனே தன் கைப்பேசியை எடுத்து டிராவல் ஏஜென்ஸிகாரர் தந்திருந்த அவரது நம்பருக்கு போன் செய்து
நிலவரத்தைச் சொன்னான்.

     ஒரே பதட்டம்!

     சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸில் கமலம் பயணமாகி மருத்துவமனையை அடைந்து ICUவில் அடைக்கப்பட்டாள்.மருத்துவர்களின் பரபரப்பான பல்வேறு பரிசோதனைகள்........

     நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. கண்ணனுக்கு வினாடிகள் யுகங்களாக நகர்ந்து கொண்டிருந்தன.

     கண்ணன் தன் கைப்பேசியை எடுத்து சென்னையில் உள்ள கமலத்தின் அண்ணன்களுக்கு நிலைமையை விவரித்துக் கொண்டிருந்தான்.

      அடுத்து என்ன செய்வது?

      தெரியவில்லை!

      நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு மருத்துவர் வெளியில் வந்தார். டிராவல் ஏஜென்ஸியும் மருத்துவரும் இந்தியில் ஏதோ பேசிக்கொண்டனர்.
     
இந்தி படிக்காதது எவ்வளவு பெரிய தவறு-- என்று அந்த அவலநிலையிலும் அவன் மனம் எண்ணியது.

         ஏஜென்ஸிகாரர் கூறினார்,''பயப்படும்படி ஒண்ணும் இல்லே சார்! ஏற்கனவே அம்மாவுக்கு சுகர், பிரஷர் எல்லாம் இருந்திருக்கும் போல இருக்கு. அதான் மூளைக்குப் போற ரத்தம் தடைபட்டு மயக்கமாயிருக்காங்க! இப்போ சரியாப்போச்சு! நினைவு திரும்பிட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில்
நாம அவங்களைப் பார்த்துப் பேசலாம்னு டாக்டர் சொல்லியிருக்கார். பயப்படாதேள்! நாங்கள்ளாம் இருக்கோம் இல்லே. ஒண்ணும் ஆகாது; க்ஷேமமா ஊர் திரும்பலாம்!''-- என்று தைரியம் கூறினார்.

         சற்று நேரத்தில் நர்ஸ் வந்து அழைத்ததும் கண்ணனும் ஏஜென்ஸிகாரரும் மட்டும் அந்த ICUவுக்குள் நுழைந்தனர்.

          கமலம் கண்களில் கண்ணீர்!

          ''என்னங்க!''-- என்றபடி கண்ணனின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

          ''ஒண்ணும் இல்லேம்மா! எல்லாம் சரியாப் போச்சுன்னுட்டார் டாக்டர்! இன்னிக்கி ஒரு நாள் இங்கே இருந்துட்டு---காலையிலே நாம ரூமுக்குத் திரும்பிடலாம். தைரியமா இரு!''

           அவன் அவளுக்குத் தைரியம் சொன்னான்; அவனுக்கு யார் தைரியம் சொல்வது?

           விஸ்வநாதா!

             ************         *********************              ***********************

            ''மருத்துவமனையில் யாரும் தங்கக் கூடாது. பேஷண்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் காலையில் பத்து மணிக்கு வந்தா போதும்.''-- என்று கூறி அவர்களை (விரட்டாக் குறையாக)  அனுப்பி வைத்தனர்.

            அறைக்குத் திரும்பிய கண்ணனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இந்த காசி யாத்திரையில் தன் உடல் நலத்திற்குத்தான் ஏதேனும் கேடு நேர்ந்து விடுமோ?--என்று பயந்தது போக எதிர்பாராத விதமாக கமலத்திற்கு நலக்கேடு நேர்ந்தது அவனால் கொஞ்சமும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

             இரவின் கணங்கள் நகர்ந்து கொண்டு இருந்தன. என்றாலும் அவனால் தூங்கவா முடியும்?  இரவு சரியாக மூன்று மணியிருக்கும். மனசுக்குள் ராம நாமத்தை ஜெபித்தபடி கமலம்  இல்லா படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அப்போது------

            காலிங்பெல் ஒலி எழுப்பியதும் பதட்டத்துடன் எழுந்தான் கண்ணன்;  ஓடிச்சென்று கதவைத் திறந்தான்.வெளியே-----

            டிராவல் ஏஜென்ஸிகாரர் நின்று கொண்டிருந்தார். அவர் முகத்தில் ஒரு பதட்டம்; கண்களில் பீதியின் பிரதிபலிப்பு!

             தவித்துவிட்டான் கண்ணன்!

             ''என்ன சார்! என்ன ஆச்சு?''--என்ற கண்ணனின் பதட்டமான கேள்விக்கு டிராவல் ஏஜென்ஸிகாரர் கூறிய பதில், ''இல்லே...இல்லே..ஒண்ணும் இல்லே....நாம கொஞ்சம் ஆஸ்பத்திரி வரைக்கும் போயிட்டு வருவோம்!''---என்று அவர் கூறியதும் அரண்டு விட்டான் கண்ணன்.

              கமலத்திற்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்திருக்குமோ? இல்லை என்றால் இந்த நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வருவானேன்?

           ''ஒண்ணும் இல்லே...வாங்க சொல்றேன்''---என்ற சொற்றொடர்களையே அவர் மந்திரம் போல் ஜபித்தபடி அழைத்துச் சென்றார்.

             *******************          **************************    

           மருத்துவமனையை அடைந்த பின்தான் கண்ணனுக்கு அந்த அதிர்ச்சியூட்டும் செய்தி தெரியவந்தது.

           அவர்களுடன் பயணித்த அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.

           கமலம் உடல் நிலை தேறித்தான் இருந்தது. என்றாலும் நள்ளிரவில் திடீரென ஓர் அலறல்!!....!!  நர்ஸ்கள் ஓடிவருவதற்குள் கமலம் மயக்கமாகி விட்டாள். மருத்துவ குழுவே வந்தது-- பலவித மருத்துவ முயற்சிகளை எல்லாம் விதி ஒரே நொடியில் முறியடித்தது...கமலத்தின் கதையை
காசியில் முடித்து வைத்து விட்டது.

        கண்ணனால் அலறக்கூட முடியவில்லை. அழக்கூடத்தெம்பில்லை. தன்னிச்சையாய்க் கண்ணீர்  மட்டும் அருவியாய்க் கொட்டிக் கொண்டிருந்தது. டிராவல் ஏஜென்ஸிகாரர் கண்ணனிடம் இருந்து கமலத்தின் சகோதரர்களின் செல்போன் நம்பரைப் பெற்று அவர்களுடன் வெகு நேரம் உரையாடினார்.

           பொழுது விடிந்து விட்டது.

           காசியில் இறந்தால் மோட்சமாமே! சாவதற்கென்றே இந்த காசியில் வந்து நூற்றுக்கணக்கான முதியவர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்களே! அவர்கள் பக்கம் எல்லாம் திரும்பியும் பார்க்காத இந்த எமதர்மராஜன் கங்கையாடி புண்ணியம் தேட காசியாத்திரை வந்த கமலத்திற்கு மோட்சசாம்ராஜ்யத்தையே வாரி வழங்கி விட்டானே!

         பைத்தியக்காரத்தனமாக கண்ணனின் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில்---

        டிராவல் ஏஜென்ஸிகாரர் கண்ணனிடம் கேட்டார்,''பாடியை ஊருக்குக் கொண்டு போக ஏற்பாடு பண்ணிவிடுவோமா?''

       கண்ணன் திரும்பி அவரை ஏற இறங்கப் பார்த்தான்.

      ''என் கமலம் புண்ணியவதி. அவள் கேட்டதற்கும் மேலே வாங்கித் தந்துதான் எனக்குப் பழக்கம்.  இப்போது அவள் கேட்டது கங்கையாட காசியாத்திரை. அவளை இங்கே 'அரிச்சந்திர காட்'டிலேயே தகனம் செய்து அவள் கேட்டதற்கும் மேல் சொர்கத்தையே அவளுக்குத் தர விரும்புகிறேன்.  இங்கே மயானத்தில்--அரிச்சந்திர காட்டில்---தகனம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்!''

         கண்ணனின் உருக்கமான பேச்சு அவரது மனதையே பிசைந்து விட்டது. இத்தனை ஆண்டுகால  அவரது அனுபவத்தில் இப்படியோர் காசியாத்திரையை அவர் கண்டதில்லை.

        காசியாத்திரை

        கமலத்தின் காசியாத்திரை பரிபூரணமாயிற்று!

        கண்ணனும் காசியில் சாஸ்திரப்படி தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றையே விட்டு விட்டு வந்து விட்டான்.

No comments:

Post a Comment